Tuesday, 7 April 2026

மத்திய கிழக்குப் போரினால் இலங்கை செலுத்தும் அதிகவிலை

 கேணல் ஆர். ஹரிஹரன் |  வீரகேசரி, கொழும்பு | 6 ஏப்ரல் 2026

 

சுமார் 2 கோடி 30 இலட்சம்  மக்களைக் கொண்ட  இலங்கை, வெகு தொலைவில் உள்ள ஈரான் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்  நாடுகளில் (பஹ்ரைன், கத்தார், குவைத், ஓமான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம்) நடக்கும் போரின் விளைவுகளினால் சிக்கித் தவிப்பது சத்யஜித் ரேயின் புகழ்பெற்ற 1973 ஆம் ஆண்டு திரைப்படமான 'அசானி சங்கெட்' (தூரத்து இடிமுழக்கம்) திரைப் படத்தை நினைவூட்டுகிறது. 

இரண்டாம் உலகப் போரின் விளவாக ஏற்பட்ட  பெரும் வங்காளப் பஞ்சத்தால் ஒரு சிறிய கிராமம் அனுபவித்த துயரங்களை அந்தத் திரைப்படம் சித்திரிக்கிறது.

ஈரான் போர் குறித்த யதார்த்த நிலைவரத்தை இலங்கை உணர்ந்த தருணம் மிகவும் அதிர்ச்சிகரமானது. போர் தொடங்கி ஒரு வாரம் கழித்து, மார்ச் 4 ஆம் திகதி, இலங்கை கடற்கரையிலிருந்து வெறுமனே  40 கிலோ மீட்டர்  தொலைவில் ஈரானிய கடற்படைக் கப்பலான 'ஐ.ஆர்.ஐ.எஸ். தேனா' (IRIS Dena) வை அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். சார்லட்  (USS Charlotte) நீர்மூழ்கிக் கப்பல்  மூழ்கடித்தது. இலங்கை கடற்படை தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை முன்னெடுத்து  உயிர் தப்பியவர்கள் 32 பேரையும் 87 ஈரானிய கடற்படையினரின் சடலங்களையும்  மீட்டது. 60 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.

இலங்கை ஈரானுடன் பல தசாப்தங்களாக நெருங்கிய  நட்புறவைக்  கொண்டிருக்கிறது.  ஈரானுக்கு இலங்கை செலுத்த வேண்டிய பழைய மசகு  எண்ணெய்க் கடனை அடைக்க, "தேயிலைக்கு எண்ணெய்" என்ற பண்டமாற்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. வெளிநாட்டு நாணய நெருக்கடியின் போது ஈரானிய தேசிய எண்ணெய் நிறுவனத்திற்கு இருந்த 19 கோடி10 இலட்சம்  டொலர்கள்  கடனை 2025 ஆம் ஆண்டின் நடுப் பகுதியில் இலங்கை 13 கோடி 6 இலட்சம்  டொடாலர்களாக குறைத்திருந்தது. 

எனவே, இலங்கை எல்லைக்கு மிக அருகில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்திற்கு பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போரைத் தொடங்கி ஒரு மாதத்துக்கும் அதிகமான  காலம் கடந்துவிட்டது.  இந்த காலப்பகுதியில் ஈரானின் இராணுவக் உள்கட்டமைப்பு, இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படைத் தளங்கள் மற்றும் தொழில்துறைத் தளங்களைக் குறி வைத்து 11,000 முதல் 15,000 இலக்குகளைத் தாக்கியுள்ளதாக அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் கூறுகின்றன.

இஸ்ரேலியப் படைகள் தென் லெபனானில் உள்ள ஈரானின் ஆதரவுப் படைகளான ஹிஸ்புல்லா மற்றும் ரத்வான் படைகளை இலக்கு  வைத்து தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றன. 

ஈரானின் அதியுயர் ஆன்மீகத்  தலைவர் மற்றும் உயர்மட்ட இராணுவத் தலைவர்களை  இஸ்ரேலியர்கள் அழித்த பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற அமெரிக்காவின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போய்விட்டது. ட்ரம்ப் ஈரானிய மக்களை இஸ்லாமிய ஆட்சித் தலைவர்களுக்கு  எதிராக கிளர்ந்தெழுமாறு  அழைப்பு விடுத்த போதிலும், ஈரானின் தலைமை மாற்றம் சுமூகமாக நடந்தது.

ஆறு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்ஸில்  நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திவரும்  ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் ஆச்சரியமான முடிவுகளைத் தந்துள்ளன. 10,000 அமெரிக்க துருப்புக்கள் மற்றும் அமெரிக்க மத்திய கட்டளையகத்தின் (CENTCOM) முன்னரங்கத்  தலைமையகம் அமைந்திருக்கும.  கட்டாரில் அல் உதைத் (Al Udeid) விமானத் தளம் ஈரானின் பல தாக்குதல்களுக்கு உள்ளாகி கட்டிடங்களும். தகவல் தொடர்பு உள்கட்டமைப்புகளும்  சேதமடைந்தன. 

தற்போது. அமெரிக்கத் துருப்புக்கள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், மேலும் அவற்றையும் தாக்கப்போவதாக ஈரான் எச்சரித்துள்ளது. அல் ஜசீரா  மார்ச் 30, 2026 அன்று வெளியிட்ட  மதிப்பீட்டின்படி, தொடரும்  மோதல்கள் மத்திய கிழக்கு முழுவதும் 3,200 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும் சுமார் 33,000 பேருக்கு  காயங்களையும். ஏற்படுத்தியுள்ளன. 

ஈரான் உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான 'ஹார்முஸ் நீரிணையை ' (Strait of Hormuz) மூடியுள்ளது. இந்த நீரிணை வழியாக சாதாரணமாக ஒரு நாளைக்கு 138 கப்பல்கள் செல்லும், அவற்றில் பாதி எண்ணெய்எரிவாயு தாங்கிச் செல்லும் கப்பல்கள். சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) தகவல்களின் பிரகாரம்  நாளொன்றுக்கு சுமார் 2 கோடி10 இலட்சம் பீப்பாய்  எண்ணெய் இந்த நீரணை வழியாகவே செல்கிறது. 

இது உலகளாவிய கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 35 சதவீதமாகும்.  இந்த நீரிணையைக் கடக்க சுங்கக் கட்டண முறையை அறிமுகப்படுத்தும் தீர்மானத்தை ஈரானிய பாராளுமன்றம் நிறைவேற்றியிருக்கிறது. 

ஈரான் ஹார்முஸ் நீரிணையை  திறக்காமல் விட்டால், கார்க் தீவில் (Kharg Island) உள்ள ஈரானிய எண்ணெய் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக  ஜனாதிபதி ட்ரம்ப் செய்த எச்சரிக்கை ஈரானிடம் இருக்கும்  யூரேனிய கையிருப்பைக் கைப்பற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது என்பதைக் காட்டுகிறது. 

இருப்பினும், போர் நிறுத்தத்திற்கான அமெரிக்க நிபந்தனைகளை ஏற்கும் நிலையில் ஈரான் இல்லை. யேமனில் உள்ள ஈரானிய ஆதரவு ஹவுதிஸ் கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இணைந்துள்ளனர். போர்  தீவிரமடைந்தால் மாற்றுப்  பாதையான செங்கடல் பாதையும் பாதுகாப்பற்றதாக மாறும்.

போரின் விளைவுகள்

மத்திய கிழக்கில் நீடித்த போர் மற்றும் சர்வதேச கடல், வான் போக்குவரத்து முடக்கம் ஆகியவை உக்ரைன் போரினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த உலகளாவிய விநியோகச் சங்கிலியை மேலும் சீர்குலைத்துள்ளன. ஹார்முஸ் நீரிணை  முடக்கப்பட்டதால், எரிசக்தி இறக்குமதியை நம்பியிருக்கும் தெற்காசிய நாடுகளின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது.அந்த நாடுகள் மாற்று எரிசக்தி ஆதாரங்களைக் கண்டறியவும் வர்த்தகப் பாதைகளை மாற்றியமைக்கவும் சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவதைச் சமாளிக்கவும் வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

மேலும், வளைகுடா ஓத்துழைப்பு கவுன்ஸில்  நாடுகளில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து  வரும் பணப்புழக்கம் (Remittances) குறைய வாய்ப்புள்ளது.

மத்திய கிழக்கில் 6 கோடி 20 இலட்சம் மக்கள்  வாழ்கின்றனர், இதில் 3 கோடி 50 இலட்சம்  பேர் வெளிநாட்டவர்கள். தெற்காசியர்கள் இந்த வெளிநாட்டு மக்கள் தொகையில் பெரும் பங்கினராக உள்ளனர்.  இலங்கையர்கள் குறிப்பாகசில்லறை விற்பனை, வீட்டு வேலைகள் மற்றும் சேவைத் துறைகளில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். 2025 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடமிருந்து வந்த பணம் 780 கோடி டொலர்களை எட்டி சாதனை படைத்தது. தற்போது இந்த வருமானம் வற்றிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேலில் சுமார் 100,000 முதல் 120,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் இலங்கையர்கள் சுமார் 15,000 முதல் 20,000 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சுமார் 8,000-9,000 இலங்கையர்கள் முதியோர் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதிக ஊதியம் (மாதம் சுமார் 8 இலட்சம் முதல் 10 இலட்சம் ரூபாய் வரை) காரணமாக பல தொழிலாளர்கள் அங்கேயே தங்கியிருக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

அதே சமயம், இலங்கையின் சுற்றுலாத் துறை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது.  2026 மார்ச் மாதத்தின் முதல் 22 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த ஆண்டை விட 17.3 சதவீதம் குறைந்துள்ளது.

அரசாங்கத்தின் நடவடிக்கைகள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வங்குரோத்தான தனது நாட்டின்  பொருளாதாரத்தை மீட்டெடுக்க சர்வதேச நாணய நிதியத்தின் (IMF ) நிபந்தனைகளை அமல்படுத்தும் அதே வேளை, மத்திய கிழக்குப்  போரின் விளைவுகளையும் சமாளிக்க வேண்டியுள்ளது. மார்ச் 15 அன்று அமைச்சர்களுடனும்  அதிகாரிகளுடனும்  ஆலோசனை நடத்திய ஜனாதிபதி திசநாயக்க  எரிசக்தி விநியோகச் சீர்குலைவுகளைச் சமாளிக்க சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் உதவி கோரியதைத் தொடர்ந்து நான்கு நாட்களுக்குள் இந்தியா இரண்டு கப்பல்களில் எரிபொருளை இலங்கைக்கு அனுப்பியது.

அரசாங்கம் மீண்டும் 'எரிபொருள் பாஸ் (QR) குறியீடு' முறையை அறிமுகப்படுதியிருக்கிறது. இதன் மூலம் தனியார் வாகனங்களுக்கு வாரத்திற்கு குறிப்பிட்டளவு  லீட்டர்கள் எரிபொருள் மட்டுமே வழங்கப்படும்.

எரிசக்தியைச் சேமிக்க அரசு நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் நீதிமன்றங்களுக்கு புதன்கிழமை விடுமுறையுடன் கூடிய 'நான்கு நாள் வேலை வாரம்' அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது

எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது விமர்சனங்களை முன்வைத்தாலும், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளால் அநுர குமார திசாநாயக்கவை  ஒரு சிறந்த தெரிவாக மக்கள்  பார்க்கப்படுகிறார்கள்.

போரும் உணவும்

ஈரான் போரினால் இலங்கையின் சமையலறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இறக்குமதியாகும் பல்வேறு  அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு  தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. எதிர்வரும் வெசாக் பண்டிகைக்கு முன்னதாக இந்த உணவுப் பொருட்கள் மீண்டும் தடையின்றி கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

_____________

 

 

 

 

 

 

No comments: